இன்னவன் கேட்பது எமக்கு விசித்திரமாக இருக்கிறது. திருமணம் நடக்கவில்லை என்பது துயரம் என்று கூறுகிறான். திருமணம் நடந்தவர்களைக் கேட்டால்தான் தெரியும். திருமணம் நடந்தது துயரமா ? நடக்காமல் இருப்பது துயரமா ? என்று. யாரையாவது கேட்டுப் பாரப்பா .திருமணம் நடந்த அனைவருமே ‘ ஏன் திருமணம் நடந்தது ? ‘ என்றுதான் எண்ணுகிறார்கள். எனவே யாராவது ஒருவனுக்கு திருமணம் நடக்கவில்லையென்றால் இறைவன் அருள் அவனுக்கு இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே ?. ஒருவனை இடர்படுத்துவதில் உனக்கு ஏன் அத்தனை ஆர்வம் ? என்று தெரியவில்லை.
இறைவன் அருளாலே, நன்றாக புரிந்துகொள்ளப்பா. திருமணம் என்ற ஒரு நிகழ்வு யார், யாருக்கு, என்று, நடைபெற வேண்டுமோ அந்த தினத்தில் கட்டாயம் நடைபெறும். இங்கு வந்து வாக்கைக் கேட்டு திருமணம் ஆகியவர்களில்கூட பலரும் கருத்தொத்து வாழவில்லை. காரணம், களத்திர ஸ்தானத்தில் தோஷம். தோஷத்தின் தாக்கம் இருக்கும் வரையில் ஒன்று, திருமணம் தள்ளிக்கொண்டே செல்லும் அல்லது திருமணம் நடந்தாலும் திருப்தியான நிலை இருக்காது. திருமணம் நடக்கவில்லை, அது நடந்துதான் ஆகவேண்டும். அது துன்பமாக இருந்தாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்கிறோம் என்று எண்ணக்கூடிய ஆண்கள், பெண்கள், நாங்கள் அடிக்கடி கூறுவதாக இவன் கூறினான், நவக்ரக தம்பதியரை வணங்கவேண்டும் என்று. அதற்காக விநாயகரை வணங்கினால், விநாயகர் திருமணத்தை நடத்தித் தரமாட்டார் என்று நாங்கள் கூறவில்லை. ஆஞ்சநேயரை வணங்கினால் அவர் அருள்பாலிக்க மாட்டார் என்று நாங்கள் கூறவில்லை. திருமண தோஷம் இருப்பவர்களின் ஜாதகத்தை நன்றாக பார்த்தாலே, ஓரளவு கோள் நிலை அறிந்தவனிடம் சென்று காட்டினாலே தெரியும், என்ன காரணம் என்று. ‘ அதற்கெல்லாம் பரிகாரமாகத்தானே சித்தர்களை நாடி வந்திருக்கிறோம். சித்தர்கள் ஏதாவது வழி செய்யக்கூடாதா ? எங்கள் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடாதா ? ‘ என்று கேட்டால், பாவங்களை ஏற்றதால்தான் அனைவரின் முன் அமர்ந்து யாம் வாக்கைக் கூறிக்கொண்டிருக்கிறோம். மனிதனிடம் பேசுவதே நாங்கள் செய்த பாவம் என்றுதான் இதுவரை எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதை நகைப்புக்காக கூறவில்லை. மனிதரீதியாகவே கூறுகிறோம்.
மனிதர்களில் மிக உயர்ந்த பதவியில் ஒருவன் இருப்பதாகக் கொள்வோம். கோடி, கோடியாக தனம் வைத்திருப்பதாகக் கொள்வோம். அவனை அழைத்து ‘ இதோ ! சாலை ஓரத்திலே உடலெங்கும் நோய் பற்றி ஒருவன் படுத்திருக்கிறானே, நாளை எண்ணிக்கொண்டு, அவனோடு கை குலுக்கி, கட்டிப்பிடித்து உறவாடுவாயா ? ‘ என்று கேட்டால் யாராவது செய்வானா ? மனிதன் செய்ய மாட்டானப்பா. நாங்கள் இறைவனின் அருளாணைக்காக, இந்த மனித ஆத்மாக்கள் எல்லாம் இறைவனின் படைப்புதான். மாயையில் சிக்கி தடுமாறுகிறது. இந்த மாயையை அகற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் இறையருளால் போராடிக் கொண்டிருக்கிறோம். எனவே உன் சேயவளும், அல்லது இங்கு இருக்கக்கூடிய சேய்களும் திருமணம் ஆகவில்லையென்றால் இப்பொழுது உறுதியாகக் கூறுகிறோம். கட்டாயம் திருமணம் நடக்கும். இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் மனிதரீதியாக சில எதிர்பார்ப்புக்களை எல்லாம் தள்ளி வைத்து ஒரு மனிதன், திருமணம் என்ற பந்தத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறைவனோ, நாங்களோ ஜாதியை, மதத்தை படைக்கவில்லை. ‘ நாங்கள் இந்தப் பிரிவில் இருக்கிறோம். இந்தப் பிரிவில்தான் பெண் வேண்டும், ஆண் வேண்டும் ‘ என்று எம்முன்னே எவன் வந்தாலும் அதை நாங்கள் செவியில் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ‘ என் பெண்ணோ, பிள்ளையோ வேறொரு பிரிவை சேர்ந்த ஒரு பெண்ணை, ஒரு ஆணை விரும்புகிறது. அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை ‘ என்றால் அதை நாங்கள் கேட்க மாட்டோம். மனிதனும், மனிதனும்தானப்பா திருமணம் செய்து கொள்கிறார்கள். மனிதனும், விலங்கும் திருமணம் செய்தால், அதை கலப்பு மணம் என்று கூறலாம். ஒரு மனிதன், இன்னொரு மனித இனத்திலே பிறந்த பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எத்தனை இடர்பாடுகளையும், தடைகளையும் மனிதன் போட்டு வைத்திருக்கிறான். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் ? மனிதன்தான் அறியாமையிலிருந்து வெளியே வரவேண்டும். ‘ என் பெண் படித்திருக்கிறாள். மிகப்பெரிய பதவியில் இருக்கிறாள். எனவே அதற்கு தகுந்தாற்போல் பிள்ளையை பார்க்கவேண்டும் ‘ என்ற எண்ணத்தை பெண்ணை பெற்றவர்களும், பெண்ணும் விட்டுவிடவேண்டும். ‘ என் பிள்ளை படித்திருக்கிறான். மிகவும் வசீகரமாக இருக்கிறான். மிக உயர்ந்த பதவியில் இருக்கிறான். கடல் தாண்டி பெரிய நிறுவனத்தில் இருக்கிறான். லகரம், லகரம் ஊதியம் பெறுகிறான். எனவே அதற்கு ஏற்றாற்போல்தான் பெண்ணை பார்ப்பேன் ‘ என்ற கோட்பாட்டை ஒரு மனிதன் விடவேண்டும். ‘ இதையெல்லாம் எங்களால் விடமுடியாது. நாங்கள் இப்படித்தான் இருப்போம் ‘ என்றால் விதி அப்படித்தான் வேலை செய்யும்.
முதலில் மனிதரீதியாக முரண்பாடுகளை களைந்துவிட்டால் அடுத்த கணம் திருமணம் நடக்கும். ஆனால் திருமணம் நடப்பது என்பது அல்ல பிரச்சினை. அங்கே மனமொத்து எத்தனை பேர் வாழ்கிறார்கள் ? என்பதுதான் பிரச்சினை. இப்பொழுது கூறுகிறோம். ஏழாம் இடத்தையும், எட்டாம் இடத்தையும் உற்றுப் பார்த்தாலே பலரின் திருமண லட்சணம் நன்றாகவே தெரியும். எனவே திருமணம் தாமதமாகிறது என்று வருந்த வேண்டாம். பின்னால் தெரிய வரும், தாமதமானதைவிட நடக்காமல் இருப்பதே மேல் என்று ஒவ்வொரு மனிதர்களும் உணர்வார்கள். இருந்தாலும் திருமண தோஷம் குறைவதற்கு எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் மிக எளிமையாக சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை எழுந்து இல்லத்தை சுத்தி செய்து சுக்ரனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் முறையான வழிபாட்டை செய்வதும், அஃதோடு மகாலக்ஷ்மிக்கு முறையான வழிபாட்டை செய்வதும், 120 தினங்கள் இல்லத்திலே மனமொன்றி இவ்வாறு வழிபாடுகள் செய்வதும், இந்த 120 தினங்களுக்குள், முடிந்தவர்கள் ஏழை ஆண், பெண் திருமணத்திற்கு முடிந்த உதவிகள் செய்தால் கட்டாயம் விதி மீறி 120 தினங்களுக்குள் திருமணம் நடக்கும். திருமணம் நடக்கும், அதைதான் நாங்கள் கூறமுடியும். அந்தத் திருமணம் எதிர்பார்த்த விதமாக நடக்குமா ? என்றால் அது அவனவன் தலையெழுத்தை பொறுத்தது