Wednesday, December 11, 2013

இலங்கயில் புகையிரத சேவை - சில தகவல்கள்

 1845ல் இலங்கை புகையிரதக் கம்பனி Ceylon Railway Company (CRC) என்ற பெயரில் கம்பனியொன்று இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிளிப் என்ஸ்ரொடலர் Philip Anstruther என்பவர் இருந்தார்.
 கம்பனியின் ஒப்பந்தக்காரரும் பொறியியலாளருமான டப்ளியு. டி. டோனி (W.T. Doyne) என்பவர் தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றார்.

1858 ஆகஸ்ட் 3ல் ஆரம்பம்:

அப்போதைய ஆளுனர் சர். ஹென்றி வோர்ட் கொழும்பில் பிரதான தொடர்வண்டி நிலையம் இப்போது அமைந்துள்ள இடத்தில் நிலத்தை வெட்டி நிர்மாண வேலைகளைக் கோலாகலமாக ஆரம்பித்து வைத்தார்.

டோனி வெற்றி பெற்றார்:

 இலங்கை அரசாங்க புகையிரதத்தின் பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த சேர். ஜி.எல்.மோலிஸ்வேர்த் Sir G.L. Molesworth என்பவருடன் இணைந்து 3 வருடங்களில் அம்பேபுஸ்ஸ வரையிலான தொடர்வண்டி பாதையை அமைப்பதில் டோனி வெற்றி பெற்றார்.களனி நதி மீதான 244 மீற்றர் (800அடி) நீளமான பாலம் பல துண்டங்களாக நிர்மானிக்கப்பட்டது.
 

முதலாவது தொடர்வண்டி என்ஜின்

முதலாவது தொடர்வண்டி என்ஜின் 1864 சனவரியில் கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரிலுள்ள ஆர்.ஸ்ரிப்பன்சன் அன்ட் கொம்பனி. (R. Stephenson & Co) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த கொதிநீராவி என்ஜின் எரிபொருளாக நிலக்கரியைப் பயன்படுத்தியது. ஆரம்பத்தில், தொடர்வண்டி பாதை அமைப்பதற்குத் தேவைப்படும் பொருட்களை உரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல இந்த என்ஜின் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் தொடர்வண்டி சேவையைத் தொடங்கி வைக்கும் வகையில் கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை அமைக்கப்பட்ட 54 கிலோமீட்டர் பாதையில் 1864 டிசம்பர் 27  ல் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது இதில் சென்ற முதலாவது ரயில் வண்டியையும் இந்த என்ஜினே இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. (இந்த என்ஜின் 1926வரை சேவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது)

சாரதி

மேற்சொல்லப்பட்ட முதலாவது தொடர்வண்டி பயணத்தின்போது பிரதம பொறியியலாளர் மோலிஸ்வேர்த் என்ஜின் சாரதியாகச் செயற்பட்டார். இந்தக் கன்னிப் பயணத்தின்போது பிரதம அதிதியாக இங்கிலாந்தின் பிராபேன்ட் பிரதேச கோமகன் பிரயாணம் செய்தார். (இவர்தான் பிற்காலத்தில் இரண்டாவது லியோபோல்ட் என்ற பெயரில் பெல்ஜிய்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.)
இவர் வெயாங்கொடையில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையும் அங்கிருந்து திரும்பிக் கொழும்பு வரையும் அந்த தொடர்வண்டி வண்டியில் பிரயாணம் செய்தார். அப்போதைய இலங்கை ஆளுனராக சார்ள்ஸ் மெக்கார்த்தி சுகவீனமுற்றுத் தாய்நாடு திரும்பியிருந்ததால் அவர் சார்பாக நாட்டைத் தற்காலிகமாக நிருவகித்து வந்த மேஜர் ஜெனரல் ஓ பிரயன் என்பவரும் பிரதம அதிதியோடு பிரயாணம் செய்தார். (தற்போதுள்ள அம்பேபுஸ்ஸ ரயில் நிலையம் புதிதாக நிர்மானிக்கப்பட்டதாகும். பழைய நிலையம் இப்போது உபயோகிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.)

முதலாவது  கொழும்பு சேவை

கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை 1867 ஏப்ரில் 26ம் திகதி நடத்தப்பட்டது.
 

சுரங்கப் பாதைகள்

கொழும்பிலிருந்து கண்டி வரை 10 இடங்களில் குன்றுகளைக் குடைந்து சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டன. இவற்றுள் முதலாவது சுரங்கப்பாதை 83.5மீ (274அடி) நீளமானது. இது மீரிகமையில் இருக்கிறது. இவற்றுள் மிக நீண்டது 333.75மீ (1095 அடி) நீளமுடையது. (பேராதனையிலிருந்து பதுளை வரை 36 சுரங்கப் பாதைகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமானது ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையில் உள்ள பூல்பேங் (Poolbank) எனும் சுரங்கப் பாதையாகும். இது 561.5மீ (1842 அடி நீளமானது.)

பிற சேவைகள்

கொழும்பிலிருந்து களுத்துறை தெற்கு வரையிலான தொடர்வண்டி பாதை 1879ல் பூர்த்தியாக்கப்பட்டது. எனினும், களுத்துறையில் இருந்து அதனை அளுத்கமை வரை நீடிக்க 11 வருடங்கள் பிடித்தன. 1890ல் தான் அளுத்கமைக்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. கண்டிக்கு- 1867 காலிக்கு-1894  நீர்கொழும்புக்கு-1909 இலும் ஆரம்பிக்கப்பட்டன.


பாதைகள் 

 
இலங்கையின் தொடர்வண்டிப் பாதைகள் அனைத்தும் 5அடி 6அங்குலத்தில் அமைந்தவை. தலைநகரான கொழும்பில் இருந்து பல்வேறு நகரங்களை நோக்கி விரிந்து செல்கின்றன. இவ் வலையமைப்பானது ஒன்பது பாதைகளைக் கொண்டுள்ளது.
 
 
 கடந்த 14.09.2013 அன்று ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி  வரையிலான 63 km கொண்ட பாதையானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இது 5 புகையிரத நிலையங்களை வழிதடத்தில் கொண்டுள்ளது.அன்றாடம் கொழும்பிலிருந்து- கிளிநொச்சி வரை 3 ரயில்சேவைகள் நடைபெறுகின்றன.
 
இலங்கை போக்குவரத்து அமைச்சர்-திரு. குமார வெல்கம
 பிரதி அமைச்சர்-
திரு. ரோஹன திஸாநாயக்க
 
 செயலாளர்- திரு. தம்மிக பெரேரா
 
 இலங்கை புகையிரத திணைக்களமானது இலங்கை போக்குவரத்து அமைச்சின்கீழ் இயங்கும் நிறுவனமாகும்.

போக்குவரத்து அமைச்சு

புகையிரதங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சு குறைந்த தொழிற்பாட்டுச் செலவுடன் தரைமார்க்கப் போக்குவரத்து முறைமையொன்றை அபிவிருத்தி செய்து பொருளியல் ரீதியில் எமது போட்டி நிலைமையை மேம்படுத்துவதும் எம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமான திறமையான சிக்கனமான போக்குவரத்து முறையொன்றை மீளக்கட்டியெழுப்பும் நோக்குடன் தாபிக்கப்பட்டது.

அத்துடன் பணியை மையமாகக் கொண்டதும் செயல் முனைப்பானதும் அறிவுத் திறன் உடையதும் அணிசேர்ந்து பணியாற்றும் மனோபாவமுள்ளதுமான வேலையாட்களின் அணியொன்றை அறிமுகப்படுத்துவதுமாகும்.
 
முகவரி: இல -01 டி.ஆர்.விஜேவர்தன மாவத்த, கொழும்பு-10.